Home » , » எமது நிலம் எமக்கு வேண்டும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்.

எமது நிலம் எமக்கு வேண்டும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்.


தமிழ் மக்களது நிலங்களை விட்டு இராணுவம்
வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று காலை 11 மணியளவில் ஆரம்பமாகியது.

இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் கடுமையான கண்காணிப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”

இராணுவமே நீ உன் வீட்டுக்குப் போ,

நான் என் வீட்டுக்குப் போவதற்கு”,

“எங்கள் நிலம் வேண்டும்”,

“இராணுவமே எங்கள் பொருளாதார வளங்களைச் சுரண்டாதே''


போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளைக் கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். கிளிநொச்சி- பரவிப்பாஞ்சான் மக்களுடைய மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒழுங்கமைத்திருந்த 2ம் கட்ட கவனயீர்ப்பு போராட்டம் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களின் கடும் நெருக்குவாரங்களுக்கும் மத்தியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதுடன், கிளி.மாவட்ட அரசாங்க அதிபருக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மகஜர் ஒன்றிணையும் கையளித்துள்ளனர்.

2009ம் ஆண்டு போரினால் மக்கள் இடம்பெயர்ந்த பின்னர் பரவிப்பாஞ்சான் கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 200ஏக்கர் நிலம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்து இடம்பெயர் ந்த மக்கள் தொடர்ந்தும் நலன்புலி முகாம்களிலும், உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த மக்களுடைய மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கடந்த மே மாதம் 28ம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை நடத்தியிருந்தது. இந்நிலையில் 2ம் கட்டப் போராட்டத்தினை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை 11மணி தொடக்கம் 12.30மணிவரை முன்னணி முன்னெடுத்திருந்தது. 

இதன்போது வழக்கம்போல் வடமாகாணத்தில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் படையினர், விலகிக் கொள்ள வேண்டும், மக்கள் அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற வேண்டும் போன்ற கோஷங்களை பதாகைகளாக எழுதிக் கொண்டும், குரல் எழுப்பிக் கொண்டும் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இதன் முன்பதாக பெருமளவு பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்ததுடன், கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வரும் மக்கள் தொடர்ச்சியாக புகைப்படம் எடுக்கப்பட்டும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டும் இருந்தனர். எனினும் அச்சுறுத்தல்களையும் மீறி பெருமளவு மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.







போராட்டத்தின் போதும் பெருமளவு புலனாய்வாளர்கள் மக்களை தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மகஜர் கையளிப்பதற்கு பொலிஸார் அனுமதி மறுப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தங்கள் பாதிப்புக்களையும், தங்களுடைய மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் போராட்டத்தின் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றிணை கையளிக்க முனைந்திருந்தனர்.

எனினும் மக்களை மாவட்டச் செயலகத்திற்குள் செல்லவிடாது பொலிஸார் தடுத்திருந்தனர். இதன் பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர், செ.கஜேந்திரன் குறித்த இடத்திற்குச் சென்று பொலிஸாருடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து 2 நபர்கள் மட்டும் பொலிஸாரின் பாதுகாப்புடன் மாவட்டச் செயலகத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதி வழங்கினர். இதனையடுத்து இரண்டு பேர் உதவி அரசாங்க அதிபரிடம் மகஜரினை கையளித்தனர்.

இதன்போது கரைச்சிப் பிரதேச செயலர் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றம், முழுமையாக நடைபெற்று முடிந்துள்ளதாக கூறி வருகின்றார். ஆனால் 200ஏக்கர் நிலத்தில் இன்னமும் மக்கள் மீள்குடியேற முடியாமல் வாழ்ந்து வருகின்றனர். 
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website