Home » , , » ஐ.நா அலுவலகம் தோட்டத்து வெருளியாம் -சுப்பிரமணியம் (ஆ)சாமி

ஐ.நா அலுவலகம் தோட்டத்து வெருளியாம் -சுப்பிரமணியம் (ஆ)சாமி


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்
அலுவலகத்தினால் தன்னிச்சையான நடவடிக்கை எதனையும் எடுக்க முடியாது என்பதால் இலங்கை அது குறித்து அலட்டிக்கொள்ள தேவையில்லை என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை வழங்கியுள்ளார். 

கொழும்புக்கு வந்திருந்த அவர் இலங்கை அரசுக்கே இத்தகைய ஆறுதல் அளிக்கும் அறிவுரையை வழங்கியிருக்கின்றார். விவசாய தோட்டங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் ‘வெருளிகள்’ என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை வர்ணித்துள்ள அவர் ஏன் இலங்கை அவர்கள் குறித்து அக்கறை கொள்ளவேண்டும், அவர்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை விவகாரம் பாதுகாப்பு சபைக்குச் சென்றால் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பாவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்த விடயம் குறித்த கவலையடையத் தேவையில்லை, நாங்கள் (இந்தியர்) ஒரு போதும் சர்வதேச விசாரணையை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

சாமி ஒருஜோக்கர் - சுரேஸ் எம்பி

13ம் திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் கூறியிருக்கும் நிலையில் அதனையும், 13ம் திருத்தச் சட்டத்தில் எவ்வாறான விடயங்கள் உள்ளன என்பதை ஆராயாமலும் பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்களே.

அவருடைய கருத்துக்களை இந்திய மத்திய அரசாங்கத்தின் கருத்தாகவோ, பாரதீய ஜனதா கட்சியின் கருத்தாகவோ எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என தெரிவித்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன், சுப்பிரமணிய சுவாமியை ஒரு ஜோக்கராக இந்தியாவில் பார்க்கிறார்கள்.

நாங்களும் பார்க்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி 13ம் திருத்தச்சட்டம் தொடர்பாகவும், தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவும் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் என்ன இருக்கின்றது. என்பதை ஆராயாமல், இலங்கை அரசாங்கம் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பாக கடந்த காலத்தில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில் ஆராயாமல் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்திருக்கின்றார்.

எனவே அவருடைய கருத்தினை பெரிய விடயமாக எடுத்துக் கொள்வதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை. என்பதுடன் அவருடைய கருத்தினை பாரதீய ஜனதா கட்சியின் கருத்தாகவோ, இந்திய மத்திய அரசின் கருத்தாகவோ நாங்கள் எடுத்துக் கொள்ளவும் தயாராக இல்லை. அது அவருடைய சொந்தக் கருத்தாகும்.

மேலும் சுப்பிமணிய சுவாமி மிக நீண்டகாலமாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார். போர் வெற்றி கொள்ளப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறிய போதும், போர் வெற்றி தினங்கள் கொண்டாடப்பட்ட போதும் அவர் இங்கே வந்து அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். 

எனவே அவர் யார்? எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளார்? என்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தெரியும், தமிழ் மக்களுக்கும் தெரியும். மேலும் இந்தியாவில் அவரை ஒரு ஜோக்கர் என்றே பலர் அழைக்கிறார்கள். ஜோக்கராகவே பார்க்கிறார்கள். 

எனவே அவரை நாங்களும் அவ்வாறே பார்க்க வேண்டியதாக இருக்கின்றது. மேலும் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் மூலம் அவரிடம் அறியாமை அதிகமாகவே இருக்கின்றது என்பதும் இம்முறை மிக தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | WORLDNEWSLK | WORLDNEWSLK
Copyright © 2013. newstamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by WORLDNEWSLK
Proudly powered by Website